06 March 2011

பெண்கள் முன்னேற்றம் !

                                                             வளர்ச்சியா,வீக்கமா ?  


கடத்த  சில  ஆண்டுகளில்  கற்பனை  பண்ணிபார்க்க  முடியாத  அளவில்
பழக்கவழக்கங்களிலும்  சிந்தனைகளிலும், முக்கியமாய்  பெண்கள் நிலையில்  பெரும்  மாற்றங்கள்  வந்துள்ளன. இந்த  மாற்றங்கள் வளர்ச்சியா, வீக்கமா?  உறுதியாய்  பெருமளவில் வளர்ச்சிதான்... ஆனால், ஆங்காங்கே  வீக்கங்களும்  தோன்றி  உள்ளதை  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.



அறியாப்பருவத்தில்  திருமணம்  நடந்து, கல்வி  அறிவு  மறுக்கப்பட்டு 
உனக்கென்று  தனியாய்  எந்த  விருப்பு, வெறுப்பும்  இல்லாமல்  வாழப்பழகு 
என்று  காலங்காலமாய்  விதிக்கப்பட்டிருந்த  சட்டங்களை  உடைத்து கொண்டு  பெண்கள்  சமுதாயம்  இன்று  முன்னேறி  உள்ளது.



மிக  பெரிய  அளவில்  கல்வித்தகுதியை  பெற்றதுமல்லாமல், ஆண்களில் உலகம்  என்று  முத்திரை  குத்தப்பட்ட  பிரிவுகளான  ராணுவம், காவல்துறை, அரசியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம்  என்று  சகலத்திலும் புகுந்து  இன்றையப்  பெண்  வெற்றிக்கொடி  நாட்டி  வருகிறாள். சில பெண்கள்  லாரி, ஆட்டோ  ஓட்டுவதிலிருந்து   பி.பீ.ஒ.வில்  இரவு  வேலை பார்ப்பது, எக்ஸ்போர்ட்  கம்பெனிகளில்  பணிபுரிவது  என்று  மிக அற்புதமாய்  தங்கள்  செயல்பாடுகளை  விரிவுசெய்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்களிடையே  பரவலாகத்  தன்னம்பிக்கை, சுயமரியாதை  உணர்வுகள் அதிகரித்திருப்பதைக்  கண்கூடாக  காணமுடிகிறது.



ஆனால், இந்த  விழிப்புணர்வே  சில  பெண்களிடம்  எல்லை  மீறி வளர்ச்சிக்குப்  பதில்  வீக்கத்தைத்  தரும். நான்  சம்பாதிக்கிறேன், என் வாழ்க்கையை  என்னால்  பார்த்துக்  கொள்ள  முடியும். யாருடைய  தயவும் எனக்குத்  தேவையில்லை, என்று  சில  பெண்கள் பெற்றோரையும், கணவனையும்  குடும்பத்தையும்  தூக்கி  எறியும்  போது  வீக்கத்திற்கு ஆளாகிறார்கள்.



கல்லானாலும்  கணவன், புல்லானாலும்  புருஷன்  என்று கண்மூடித்தனமாய்  அடிமைப்பட்டிருப்பது  தேவையே  இல்லை என்றாலும், விட்டு கொடுப்பதும், அனுசரித்துச்  செல்வதும், நாளைக்கு  கண்டிப்பாய் விடியும் என்று  நம்பிக்கையுடன்  வாழ்வதும், வாழ்க்கைக்கு  அர்த்தம் சேர்க்கும்  என்பதை  மறந்து  விட்டால்  எப்படி!



வசதியாய்  வாழ  பணம்  அவசியமான  ஒன்று. ஆனால், பணம்  இருந்தால் 
சந்தோஷமாக  வாழ்ந்து  விடலாம்  என்பது  பேதைமை  அல்லவா?
இன்றைய  சமுதாயத்தில்  பலரும்,{ஆண்களையும் சேர்த்துதான்} பணத்தை 
சுற்றி  வாழ்க்கையை  பின்னத்  தொடங்கி  விட்டதை  மனித  நேயத்தின் வீழ்ச்சி.



நாம்  வாழ  பணம்  தேவை. கடுமையாக  உழைத்து  சம்பாதிப்பது  மிக அவசியம். ஆனால்,  பந்தங்களையும், பொறுப்புகளையும், கடமையையும் விலையாக  கொடுத்து  வரும்  முன்னேற்றம்  வளர்ச்சி அல்ல...
மனித  நேயத்தையும், மதிப்புகளையும்  வேர்களாகக்  கொண்ட  பெண்கள்
முன்னேற்றம்தான்  ஆரோக்கியமான  வளர்ச்சி.


 


              
                                             அன்புடன் 
                                                      ஆயிஷா.